Friday, May 24, 2013

சமையல் -30 வகை



பாலக் சிக்கன் மசாலா


சிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா? செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள்.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை -1 கட்டு
சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம் -300 கிராம் (நறுக்கியது)
தக்காளி -200 கிராம் (நறுக்கியது)
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம்,
ஏலக்காய்தலா 2
இஞ்சி, பூண்டு
விழுது – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.


வெஜிடபிள் மசால்

சப்பாத்தி, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா செய்து பாருங்கள். தேங்காய் சேர்க்காமல் செய்வதால், டயட்டில் இருப்பவர்களுக்குக் கூட இந்த மசால் ஏற்றது. சத்தானதும் கூட. செய்து பார்த்து சுவைப்போமா!
தேவையான பொருட்கள்:
கேரட் – 2 பெரியது
உருளைக்கிழங்கு -2 பெரியது
சவ்சவ் -பாதி
பச்சைப்பட்டாணி – 2 கைப்பிடியளவு
நறுக்கிய பீன்ஸ் -1/2 கப்
நறுக்கிய முட்டைக்கோஸ் -1 கப்
காலிப்ளவர் -1/2 கப்
பெரிய வெங்காயம் -1
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
தனியாத்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -2 டீஸ்பூன்
சோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் -தாளிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
கார போண்டா, பிரட் சாண்ட்விச் செய்யவும் இந்த மசால் ஏற்றது.

தம் சிக்கன்

 

சிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/4 கிலோ
முந்திரிப்பருப்பு – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது)
தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
கசகசா – 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்
சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம்
கொத்தமல்லி இலை-சிறிதளவு (நறுக்கியது)
பால் – 100 மில்லி
கரம் மசாலா தூள்சிறிதளவு
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை:
பாலில் முந்திரிப்பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியையும், மிளகாய் விழுதையும் சேர்த்து வதக்கவும்.
இப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். சிக்கனில் தேவையான உப்பு சேர்த்து சிக்கன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பாக கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
இப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி.


மட்டன் கீமா புலாவ்


மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். இதன் அட்டகாச ருசியில் சாப்பிடும் போது நீங்களே அளவு தாண்டி விடுவீர்கள். செய்து பார்த்து ருசிப்போமா?

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 கப்
கொத்துக்கறி – 300 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 8
மிளகு – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய் விடவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி பூண்டு விழுது, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்
கறியை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேக விடவும்.
பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும். இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.


பால் கொழுக்கட்டை

 

செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் பிரசித்தி பெற்றது இது. வெல்லம் சேர்த்த இனிப்பு வகை என்பதால், செரிப்பதற்கு எளிதானது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர் களுக்கும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி-1 டம்ளர்
வெல்லத்தூள்-1 டம்ளர்
தேங்காய்ப்பூ-ஒரு மூடி
ஏலக்காய் தூள்-1/4 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை ஊற வைத்து நன்கு கெட்டி யாக அரைத்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை பெரிய சைஸ் முறுக்கு அச்சில் ஒரு பேப்பரில் பிழிந்து விடவும்.
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் பிழிந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மூன்று தடவைகளாக போடவும். முதல் தடவை போட்டதும் மாவு வெந்து மிதந்த பிறகே அடுத்த தடவை போட வேண்டும். முழுவதும் வெந்ததும் வெல்லத்தூள், தேங்காய்ப்பூ, ஏலப்பொடி சேர்க்கவும். வெல்லம் கரைந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும். இப்போது சுவையான பால் கொழுக்கட்டை ரெடி. சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு: இறக்கி வைக்கும்போது சற்றே தளர இருந்தால் தான் போகப் போக ஆறியதும் சரியான பதத்தில் இருக்கும்.

இறால் பஜ்ஜி


 

வாழைக்காய் பஜ்ஜி தொடங்கி வெங்காய பஜ்ஜி, முட்டை பஜ்ஜி வரை சுவைத் திருப்பீர்கள். இது இறால் பஜ்ஜி. இதையும் தயாரித்து சாப்பிட்டு பார்த்து நாவில் ()தங்கிய இதன் சுவையை மனதோடு மணமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால் -1/2 கிலோ
மைதா – 2 கையளவு
அரிசி மாவு -1 கையளவு
சோள மாவு- 1 கையளவு
உப்பு -தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் -2 (அரைக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெயைத் தவிர அனைத்தையும் மிக்ஸ் செய்யவும். மாவை நன்கு திக்காக கரைத்து இறாலை ஊற வைக்க வேண்டும். ஊறிய இறாலை இப்போது மாவில் நன்கு புரட்டி எண்ணெயைக் காய வைத்து பொரித் தெடுக்கவும்.
இப்போது இறால் பஜ்ஜி ரெடி.



மசால் தோசை பலவிதம்

உருளைக்கிழங்கு மசால் தோசை

புழுங்கல் அரிசி- 500 கிராம், பச்சை அரிசி- 100 கிராம், .பருப்பு- 150 கிராம், வெந்தயம் சிறிதளவு கலந்து ஊறவைத்து, தோசை மாவு தயார் செய்துகொள்ளவும். உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு- 250 கிராம், பெ.வெங்காயம்-2, .மிளகாய்-4, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு போன்றவைகளை எடுத்துக்கொள்ளுங் கள். இவற்றை பயன்படுத்தி மசாலா தயார் செய்யுங்கள்.
தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

வெஜிடபிள் மசால் தோசை

முதலில் குறிப்பிட்டிருப்பதுபோல் அரிசி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊறவைத்து அரைக்கவேண்டும். பாதி அளவு அரைபடும்போது காய்ந்த மிளகாய்-6, சீரகம்- ஒரு தேக்கரண்டி போன்றவைகளை அதில் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் போன்றவைகளை யும் தேவையான அளவு கலந்து அரைக்கவேண்டும். பின்பு அதில் கேரட், பீட்ரூட், நூல்கோல், முள்ளங்கி போன்றவைகளை தலா 75 கிராம் அள விற்கு சேர்த்து அரையுங் கள். தோசை மாவு பக்குவத்திற்கு அரைத்து, தோசையாக வார்த்து சுவைக்கலாம்.

வெஜிடபிள் டிரை ஸ்டீவ் மசால் தோசை

- தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள்
- விரும்பும் காய்கறிகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- கொதி நீரில் உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை காய்கறியை வேகவிடுங்கள்.
- ஒரு தேங்காயில் இருந்து பாலை பிழிந்தெடுத்து, வேகவைத்த காய்கறியில் கலந்து, அடுப்பில் அரை சிம்மில் வைத்து கொதிக்கவிடுங்கள். தேவைப்பட்டால் காரத்திற்கு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேருங்கள். நன்றாக கிளறிவிடுங்கள். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் அடியில் பிடித்துவிடும். 15 நிமிடத்தில் `டிரைஆகிவிடும். இந்த மசாலை தேவையான அளவு எடுத்து, தோசையில் சேர்த்து மசாலா தோசையாக சாப்பிடலாம்.

கேரட் மசால் தோசை

தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, கறிமசால் போன்றவை களை சேர்த்து உருளைக்கிழங்கு மசால் போன்று தயார் செய்யுங்கள். இது கிரேவி மாதிரி இருக்கும். இதை பயன்படுத்தி தோசை தயார் செய்து சுவையுங்கள்.

எந்த `மசால்நல்லது?

நமது மசால் தோசையை உலகமே சுவைப்பது மகிழ்ச்சியான விஷயம். மசால் தோசை என்றதும் உருளைக் கிழங்கு மசால்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், டீன் ஏஜினருக்கு அது சிறந்த உணவுதான். பொட்டாசியமும், மாவு சத்தும் அதில் நிறைய இருப்பது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது தான். ஆனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் அளவோடு உருளைக்கிழங்கு மசால் தோசை சாப்பிடவேண்டும்.
உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் உடல்வலுவுக்கு தேவையான புரதம், அமினோ அமிலம், பலவகை வைட்டமின் சேர்ந்த உணவு பொருட்கள் நிறைய உள்ளன. அவை களை சேர்த்து மசாலா ஆக்கலாம். அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகின்றன.
அவற்றில் சில:
- சோயா பீன் மசாலா அல்லது டோபு மசாலா.
- சோயா சங்க்ஸ் மசாலா.
- வெந்தய கீரை மசாலா.
- முடக்கத்தான் கீரை மசாலா.
- பசலைக்கீரை மசாலா.
- பருப்பு உருண்டை மசாலா.
- பூசணிக்காய் மசாலா.
- ஓட்ஸ் மசாலா.
- காளான் மசாலா.
- காலிபிளவர், வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மசாலா.
- கார்ன் மசாலா.
- பீஸ் மசாலா.
மேற்கண்ட மசாலாக்களை உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் சேர்த்தால் அதிக சத்தும், சுவையும் கிடைக்கும்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு மாவு சத்தும், புரதச் சத்தும் தேவை. அவை இரண்டும் உளுந்து, அரிசி கலந்த தோசை மாவில் இருக்கிறது. அதனால் தோசை எல்லா வயதின ருக்கும் ஏற்றது.
நமக்கு வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நல்ல உணவுகள் நமது மூன்று விதமான தேவைகளை நிறைவேற்றவேண்டும்.
ஒன்று: நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் ஆக மாற அதிக நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியானால்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
இரண்டு: நாம் சாப்பிடும் உணவு அதிக நார்ச்சத்து நிறைந்ததாகவும், எண்ணெய் பயன் பாடு குறைந்ததாகவும் அமையவேண்டும்.
மூன்று: கலோரி குறைந்த, உடல் எடையை அதிகரிக்காத உணவு அவசியம். குறைந்த அளவே சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வை தருவதாக அந்த உணவு அமையவேண்டும்.
இந்த மூன்றுவிதமான தேவைகளை நிறைவேற்ற நமது பாரம்பரிய உணவுகளில் ருசிக்கு தக்கபடி சில மாற்றங்களை ஏற்படுத்தி உண்ணுவது நல்லது. அந்த வகையில் நார்ச்சத்து நிறைந்த முடக்கத்தான் கீரை, பசலைக்கீரை போன்றவைகளை தோசைக்கான மசால்களில் சேர்க்கவேண்டும்.
தோசை மாவுக்கு பாரம்பரியமாக அரிசி சேர்க்கிறோம். அதற்கு பதிலாக ஓட்ஸ், கோதுமை, சோயா, கடலைமாவு, கேழ்வரகு மாவு, அவல், பிரவுன் அரிசி போன்றவைகளை சேர்க்க வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் படிப்படியாக இவைகளை பயன்படுத்த வேண் டும். உடலுக்கு மிகத் தேவையான இரும்பு சத்து, கால்சியம் போன்றவை மேற் கண்டவைகளில் உள்ளன.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஒல்லியாக இருக்கும் டீன்ஏஜ் பெண்கள் தோசைக்கு முட்டை மசாலா, பாலாடைக்கட்டி மசாலா, பன்னீர் மசாலா, கோழி இறைச்சி மசாலா, மீன் மசாலா, இறால் மசாலா போன்றவைகளை தயார்செய்து உண்ணலாம். இவற்றை காலை உணவாக சாப்பிடுவது நல்லது. அதனால் உடல் இயக்கம் சிறப்பாகும்.
சிறிதளவு எண்ணெயை கலந்து வீட்டில் தயாரிக்கும் சாதாரண தோசை ஒன்றில் 100 முதல் 120 கலோரி இருக்கும். ஓட்டலில் ஒரு தோசை சாப்பிட்டால் 250 முதல் 300 கலோரி உடலில் சேரும். அது அளவில் சற்று பெரிதாக இருப்பதாலும், எண்ணெய் அதிகம் சேருவதாலும் கலோரி அதிகரிக்கிறது. அதே நேரத்தில் சோயா, ஓட்ஸ் போன்றவற்றில் தயாரான தோசை சாப்பிட்டால் 60 முதல் 80 கலோரிதான் சேரும். இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக்கொண்டு உடலுக்கு ஏற்ற விதத்தில் நாம் மசால் தோசைகளை தயாரித்து சாப்பிடவேண்டும்.

மொச்சை நெத்திலி குழம்பு

நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விடுவீர்கள். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். வாசனை தெருவையே திரட்டும். சமைத்து ருசிக்கலாமா?

தேவையான பொருட்கள்:
மொச்சைப்பயறு – 200 கிராம்
நெத்திலி மீன் – 1/2 கிலோ
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
புளிஎலுமிச்சம்பழ அளவு
தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலைசிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5 (கிள்ளியது)
செய்முறை:
மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும். மீனை சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும். பயிறுடன் அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கொதித்து வெந்ததும், நெத்திலி மீனை சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும். இப்போது மொச்சை நெத்திலி மீன் குழம்பு ரெடி.

மிளகுக்குழம்பு

செட்டிநாட்டுக் குழம்பு வகைகளில் ஒன்றான மிளகுக் குழம்பு சூடான சாதத்துடன்பரிமாற ஏற்றது. மிளகாய்த் தூள் சேர்த்து குழம்பு வைப்பதற்குப் பதிலாக காரத்திற்கு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்தால் அல்சர் பிரச்சினை ஏற்படாது. இதோ செய்முறை:
தேவையானவை:
புளிசிறு உருண்டை
தேங்காய்ப்பூ – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்புதேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு சீரகத்தை போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வதக்கிக் கொள்ளவும். ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்து அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு கூட்டிக் கொள்ளவும். இத்துடன்அரைத்த மிளகு விழுதை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, கூட்டி வைத்திருக்கும் குழம்பை ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்து வருமாறு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். இப்போது மணக்கும் மிளகுக் குழம்பு ரெடி.

டயட் வெஜ் குருமா

22/08/2012 vayal பின்னூட்டம் நிறுத்து
தேங்காய் சேர்க்காத வெஜ் குருமா இது. எனவே டயட் குருமா என்றும் சொல்லலாம். செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்
காரட் -2
பச்சைப்பட்டாணி -1 கப்
பீன்ஸ் -10
உருளைக்கிழங்கு -2
காலிபிளவர் -சிறு துண்டு
முட்டைக்கோஸ் -சிறிதளவு
பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
பட்டை கிராம்பு, சோம்பு, ஏலக்காய் -சிறிதளவு
உப்புதேவையான அளவு
எலுமிச்சம்பழம் -1 மூடி
ரீபைன்ட் எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர், கோஸ் ஆகியவற்றை பொடியாக அரிந்து பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு. ஏலக்காய் தாளித்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதங் கியதும், அவற்றுடன் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு வதக்கவும்.
குக்கரில் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வதக்கிய வெங்காய கலவை சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். இந்த மசாலாவை லேசாக மசித்து எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கி வைக்கவும். இதில் பச்சைக்கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம்.
தேங்காய் சேர்க்காததால் டயட் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்ற சத்தான குருமா இது. சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், தோசை வகைகளுக்கு ஏற்றது.

No comments:

Post a Comment